கடற்கரும்புலி மேஜர் கணேஸ்

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்….BT-Maj-Ganesh

கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்….

பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்….

அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும்.

கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது.

எல்லாவற்றுக்குமாக சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடிதுக்கொண்டிருந்தார்கள்.

வரதனுக்கும், மதனுக்கும் முந்திய அந்த 60 நாட்கள்….

அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனை துரத்துவதும், அவன் சண்டை பிடிக்காமலே தப்பி ஓடுவதும், பின்னர் ஏமாற்றத்தோடு இவர்கள் திரும்பிச் செல்வதுமாக கழிந்த அந்த இரவுகள்.

அவர்களில் ஒருவருக்காக தன்னை அனுப்பிப் பார்க்குமாறு நச்சரித்துக்கொண்டிருப்பான் கணேஸ்.

“டோறா”வை நெருங்குவதற்கான தாக்குதலின் திட்டம் தயாரிக்கப்பட்ட போது….

அந்தச் சாதனையின் சாதனையாளர்களுள் ஒருவனாகத் தான் போக வேண்டுமென்ற ஆதங்கம் அவனுக்கு.

பருத்தித்துறைக் கடலில் புவீந்திரனும், மணியரசனும் 15 நாட்களுக்கு மேல் காத்திருந்த காலத்திலும் நச்சரிப்பு.

ஆனாலும், கணேஸ் இல்லாமலேயே அந்த இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக முடிந்த போதும் கூட, உற்சாகம் குன்றாமல் அடுத்த தாக்குதலுக்கான காத்திருப்புகளில், வேட்கையோடு அவனது நாட்கள் நகர்ந்தன. கூடவே கோபியும் இன்னும் சில கரும்புலிகளும்….

ஏற்கனவே இரண்டு விசைப்படகுகளை இழந்துவிட்ட எதிரி பின்வந்த நாட்களில் அதிக அவதானத்துடனேயே இயங்கினான்.

வரதன், மதனுக்குப் போல, கண்டபின் தப்பியோடும் தந்திரத்தை அல்லாமல்; இவர்களின் கண்களில் தட்டுபடுவதைத் தவிர்த்து விடுவதையே தான், எதிரி தனது யுத்தியாகக் கையாண்டான்.

இப்படியாக; இலக்கை அடையாத துயரோடு இவர்கள் திரும்பி வருவது கூட, பூநகரிக்குள் “தவளைகள்” நுழையும்வரை தான் நீடித்தது.

கடலில் இரை தேடிவிட்டுக் கரையேறும் சமயங்களில், சக்கை வண்டிகளில் வரும் மற்றவர்கள், எங்கள் சண்டைப் படகுக்களினூடு லாவகமாக வளைத்துத் திருப்பி அலை கிளப்ப ஓடிக் காட்டுகிறபோது. கணேஸ் மட்டும் மெதுவாக ஓடி, ஓரமாக வந்து, அமைதியாகக் கரையேறுவான்.

“இந்த மாதிரி ஓடு உன்னால ஏலாதா…?” என்று யாராவது கேட்டால் “எதிர்பாராம ஏதாவது நடந்திட்டால்…..” என இழுத்து…..,

“அந்நியாயமாக எல்லோருமே சாகாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேணும்” என்று தொடரும் அவன், “சம்பவம் ஆகக்கூடாது மச்சான்” சரித்திரம் ஆகோணும்” என்று முடிப்பான்.

இப்போது……

“ஒப்பரேஷன் தவளை” வரலாற்றுச் சமரில், நாகதேவன்துறை கடற்படைத் தளம் மீதான தாக்குதலில் முக்கிய பங்கேற்பு, அந்த வீரமகன் சரித்திரமாகிவிட்டான்…..!

அன்றைய காலம் இந்திய விஸ்தரிபு வாதிகளின் படைகளை எதிர்த்து தமிழீழம் போர்க்கோலம் பூண்டிருந்த எழுச்சி நாட்கள்.

அப்போது அவனுக்கு வயது பதின்நான்கு தான்.

சாற மடிப்பிற்குள் சேட்டை மறைத்துக் கட்டிக்கொண்டு, அம்மாவுக்கு போக்குக் காட்டிவிட்டு வெளியேறியவனை பற்றி “தம்பி சந்தியில போஸ்ரர் ஒட்டிக்கொண்டு நிற்ப்பான்” என்றோ. “கடையில சாப்பிட்டுப் பார்சலுகள் கட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக போறான்” என்றோ யாராவது சொல்லுவார்கள்.

அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

அம்மாவுக்கும், நாகநாதி ஐயாவிற்கும் வாரிசாக, 21 வருடங்களுக்கு முன்னர் மாசி 13ம் நாளில் பிறந்தவன் ஜீவநேசன்.

இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்த்தெடுத்த தாயல்லவா….. அவள் துடித்துப் போனாள். அவள் தான் துடித்தாளே தவிர அவன் ஓய்ந்ததில்லை.

திடீரென ஒரு காலை , அவசர அவசரமாக ஓடிவந்து அயல் வீட்டுக்காரர் ஒருவர், கடையில் சாப்பாட்டுப் பொதிகள் வாங்கிய ஜீவனை யாரோ காட்டிக் கொடுத்து, இந்தியர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னபோது, அம்மா இடிந்து போனாள். அந்த வீடு சாமவீடு போலாகிவிட்டது. அழுகுரல் நவரக்கிரி கிராமத்தை நிறைத்தது.

காங்கேசன்துறை இந்தியப்படைச் சிறையில் அடுத்த ஒரு வருடம் கழித்து. பார்க்கப் போகின்ற அப்பாவிடம் ஊர்ப் புதினங்களைத் தான் விசாரித்தானேயல்லாமல், வீட்டுப் புதினங்களையல்ல. மிகவும் அமைதியானவனான அந்தச் சிறுவனின் உள்ளத்தில், ஆவேசப் புயலொன்று அப்போது தான் மையங்கொண்டது.

இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் விடுவித்து விட்டுப்போன கணேஷ், ஐந்தாறு நாட்கள் அம்மாவோடு இருந்துவிட்டு, முழுமையாகவே இயக்கத்திற்குப் போய்விட்டான்.

அம்மா துயரத்தோடு கடவுளை நேர்ந்து கொண்டிருக்க, அந்த விடுதலைப்புலி துப்பாக்கியோடு “போர் உலா” வந்தான்.

வட தமிழீழப் போர் அரங்கின் அநேகமான எல்லா முனைகளிலும், அவனுடைய துப்பாக்கி கண்டிருக்கிறது.

கோட்டை முற்றுகையிட்டிருந்த போது, அதை முறியடிக்க வந்தவர்களை மண்டைதீவில் எதிர்கொண்டபோது, மாங்குளத்தில் படைமுகாமை அழித்தபோது, “வன்னி விக்கிரம” என்று படையெடுத்தவர்களை தோல்வியுறச் செய்த போது, தாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து மணலாற்றில் “மின்னலை” தெறிக்கச் செய்தபோது, ஆனையிறவில் “பலவேகய”வில் புறப்பட்டவர்களை “ஆமை வேகய”வில் நகரச் செய்தபோது, மன்னாரில் படை எடுத்தவர்களுக்கு படையெடுத்த பதுங்கித் தாக்குதலின்போது…. இப்படியாக எங்கும், எல்லாச் சமர்களிலும் கணேஸ் சுவடு பதித்தான்.

அந்தக் காலத்திலேயே, ஒரு கரும்புலித் தாக்குதலுக்கான கனவு அவனது இதயத் துடிப்போடு கலந்திருந்தத்து.

இப்படியிருக்கையில் ஒரு நாள் …..

அது, கடந்த வருடத்தின் இறுதி. பலாலியிலிருந்து தெல்லிபளை நோக்கி முன்னேறிய “ஒப்பரேஷன் பூமியதிர்ச்சி”யை நிறுத்த நடந்த சண்டையின்போது; இடது முழங்காலுக்குக் கிழே துளைத்த ஒரு ரவை, முக்கிய நரம்போன்றை அறுத்துச் சென்றுவிட்டது.

சண்டைமுனையில் மருத்துவ வசதியின்மையால், பெருமளவு இரத்தம் வெளியேறிவிட, மயக்கமுற்று எடுத்துச் செல்லப்பட்ட கணேஸ்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, யாழ்பாணம் மருத்துவமனையின் கட்டிலொன்றில், வெடிபட்ட இடத்திற்க்குக் கிழே அந்தக் கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில, அடக்கிக்கொள்ள முடியாத அழுகையோடு படுத்திருந்தான்.

போராட்டத்தில் காலை இழந்தமைக்காக அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. அருகில் நின்ற நண்பனின் கையைப் பற்றி அவன் விம்மினான்.

“இனி எப்படியடா நான் சண்டைக்குப் போறது…..?”

கணேஸ்….!

எவ்வளவு மென்மையானவனாக அவன் வாழ்ந்தான்! எவரோடும் சச்சரவுக்குப் போகாமல், எல்லோரையும் சமாளித்துக்கொள்வானே!
என்னதான் பிரசினையென்றாலும், விட்டுக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டானே தவிர, அவன் சண்டை பிடித்துப் பெரிதாக்கியிருக்கமாட்டான். அவன் எவ்வளவோ பொறுமை சாலியாக இருந்தான்; எல்லா விடயங்களிலுமே.

அவனை மேலோட்டமாக பார்க்கிற எவரும், எதுவுமே தெரியாத அப்பாவி என ஒரு கணிப்பீட்டை வைப்பார்கள்.

விஷயம் தெரியாத நாலுபேரை இருத்திவிட்டு, எல்லாம் தெரிந்த மேதாவிகளைப் போல புழுகித் தள்ளும் நண்பர்களைத் தன்னிடம் வசமாகச் சிக்கவைத்து; “தேவையில்லாம வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே” என்று தலையைப் பிய்த்துக்கொண்டு எழுந்து போகிற அளவுக்கு அவன் கொண்டுபோய் விடுவான்.

இருப்பினும், தனக்குத் தெரியாத, அது தொடர்பான பூரண அறிவு இல்லாத, எந்த விடயங்களைப் பற்றியும் அவன் வாய் திறக்கவே மாட்டான். வெட்கப்படாமல், விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து விசயங்களைத் தெரிந்து கொள்வதில்த்தான் அவனுக்கு ஆர்வம் அதிகம்.

தான் செய்ய நினைக்கும் காரியங்களை செய்துமுடிக்கும் வரை முயற்சி எடுப்பதும், காலிழந்தவன் என்று கருணைகாட்டி மற்றவர்கள் உதவ முன் வந்தாலும் புன் சிரிப்போடு மறுத்துவிட்டு, தானே எல்லாவற்றையும் செய்துமுடிப்பதும், ஒரு கால் இழந்தாலும் கூட முகாமிலிருக்கும் முழு மனிதர்கள் செய்யும் வேலைகளெல்லாம் தன்னையும் ஈடுபடுத்த எத்தனிப்பதும் அவனது சிறப்பான அம்சங்கள்; அவை நாங்கள் அவனிடம் படிக்க வேண்டிய பாடங்கள்.

காயம் மாறி; ஜெய்ப்பூர் காலோடு துயரத்தையும் சுமந்து மருத்துவ மனையிலிருந்து வந்தவனுக்கு, யாழ் மாவட்ட தாக்குதற் படைப் பிரிவில் நிதி வேலை கொடுக்கப்பட்டபோது, சண்டைக்குப் போக வேண்டுமென தளபதியோடு சண்டைபிடித்து ஆனையிறவுக்கு போனதும்…

அகன்ற பாத்திரத்தில் சோறு குழைத்து, ஐந்தாறு பேர் சேர்ந்து நாங்கள் சாப்பிடும்போது; வெறுமையாகும் பாத்திரத்தை நிரபிவர வேறேவரையும் பாராமல் தானே தூக்கிக்கொண்டு எழுவதும்….

“ஜெயராஜ்” முகாமிலிருந்த ‘அருகிருக்கை’ பொருத்திய B.S.A. மோட்டார் சைக்கிளில் அவனை இருத்தி நாங்கள் தள்ளி விளையாடுகையில் வளைத்து திருப்பி ஓட வீடு வசதி காணாதென்று முற்றத்தில் இறக்கி , பின் முற்றமும் வசதி காணாதேன்று வீதிக்கெடுத்தபோது, தளபதியைக் கண்டு நாங்கள் தடுமாற, வேலியோடு மோதி வண்டி கவிழ, தலையில் நல்ல அடிபட்ட அவன் எழுந்து பிடரியைச் சொறிந்துகொண்டு நின்றதும், தண்டனை தந்தபோது, கும்மாளமிட்ட படி அவனும் சேர்ந்து செய்ததும்….

கிளாலியில் எம்மவர்களை வேட்டையாட வரும் எதிரியை நாங்கள் வேட்டையாடும் கடற்சண்டைகளில், “நேவி”யைக் கலைத்து விரட்டும் புலிகளின் விசைப்படகுகளிற்கு அவன் ஒட்டியாய் இருந்ததும்….

ஐந்து நாள் ஒய்வு தந்து வீட்டுக்கனுப்ப ‘இன்று படகுச்சேவை’ என்று நாளேட்டின் செய்தியைப் பார்த்துவிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட இரண்டாம் நாளே புறப்பட்டு அவன் கிளாலிக்கு வந்ததும்….

அப்போதெல்லாம் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்ய வேண்டுமென்ற வேட்கையை, தனது மனக் குகையினுள் அவன் சுமந்துகொண்டு திரிந்ததும்….

நாங்கள் அடிக்கடி அவனைப்பற்றி பேசிக்கொள்ள எங்களுக்குள் உயிர்வாழும் அவனது நினைவுகள்….

அவனது வீரம்; அவனது தியாகம்; அவனது முயற்சி; அவனது விட்டுக்கொடுப்பு; அவனது முன்மாதிரி; ஒட்டுமொத்தமாக அவனே எப்போதும் நினைவுகொள்ளவேண்டிய எடுத்துக்காட்டுகள்.

கணேஸா…!

உனது வீட்டுக்குப் போய்வந்த அந்த இறுதிப் பயணம்.

அதை நினைக்கும் போதெல்லாம் உன் அம்மாவின் விழி ஓரங்களில் நீரின் கசிவு.

“பழஞ்சோறு குழைத்து தீத்தி விடணை” என்று சாப்பிட்டாயாம்.

ஒரு நாளுமில்லாதது போல, அப்பாவையும், அம்மாவையும் கொண்டு நீர் அள்ளிக் குளித்தாயாம்.

“தலையெல்லாம் காஞ்சுபோய்க் கிடக்கு தேடா….. கொஞ்சம் எண்ணை வையன்ரா…….” என்று ஆதரவாகக் கேட்ட அம்மாவிடம், “நாளைக்கு கடல் தின்னப்போற தலைதானேயணை…..” என்று சிரித்தபடி சொன்னாயாம்.

முன்னர் யாரோ சொன்னது நினைவுக்குவர, இப்போது சாதுவாக சந்தேகமும் எழ, ஆச்சரியத்தோடும்; அச்சத்தோடும், “நீ கரும்புலியாய் போகபோபோறியாம் தம்பி…… உண்மையாவோடா….?” என்று பரிதாபமாகக் கேட்ட அம்மாவை, சிரித்துக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சி, “உன்னை விட்டுட்டுப் போவனோணை அம்மா!” என்று சொல்லிவிட்டுப் போனாயாம்.

இப்போது…..

கண்ணீரோடு அந்தத் தாய், தன் வீரமகனின் படத்திற்குப் பூப்போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“ஒப்பரேஷன் தவளை”க்கான உற்சாகமான முன்னேற்பாடுகள்.

உறக்கமற்ற இரவுகள்; ஓய்வற்ற நாட்கள்.

கடற்புலி வீரர்களின் கடுமையான கடற்பயிற்சி.

வெடிமருந்துப் படகினை எதிரியின் தளத்தோடு மோதும் செயல்முறையை, கணேஸ் சலிப்பின்றிக் களைப்பின்றி பயின்றான்.

அந்த நாள் வந்தது ….

சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலைவரிசைகளில் புலிகள் இயக்கத்தை முதன்மைப் படுத்திய நாள் அது.

சாமம் கழிந்த நள்ளிரா வேளை.

சமர் ஆரம்பித்துவிட்டது; பூநகரியில் புயல்வீசத் தொடங்கிவிட்டது.

நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைச் சூழ்ந்த புலிகள் கடல் – தரை வழிகளிலான ஆக்ரோசமான பாய்ச்சல்.

அங்கிருந்த, “றாடர்” கோபுரமும் தகவல் பரிவர்த்தனை நிலையமும் தான் கணேசின் இலக்கு.

உரிய நேரம் வந்தது. உத்தரவுக்காகக் காத்திருந்தவன், இதுதான் உரிய தருணம் என்பதைத் தானாகவே தீர்மானித்தான்; புறப்பட்டான்.

கடலில்; தனது தளத்தைச் சுற்றி; எதிரி அமைத்திருந்த முட்கம்பி வேலிகளை எகிறிக் கடந்து பாய்ந்தது கணேசின் வெடிமருந்துப் படகு.

இலக்குப் பிசகாத தாக்குதல்; தொடரும் வெடியோசைகளுக்கு நடுவே கடலைதிரும் குண்டோசை; கண்ணிமைக்கும் பொழுதில் பிரகாசித்த ஒளிப்பிழம்பு.

யாழ்ப்பாணக் கடல் நீரேரியில், தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்துவிட்டு, உப்பு நீராக உருமாறிப் போனான் அந்த வீரன்!

விடுதலைப்புலிகள் (மார்கழி, தை1994) இதழிலிருந்து

Comments are closed.

Up ↑